இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை. ஐ.நா. விவாதத்தில் அன்புமணி வலியுறுத்தல்
ஜெனீவா : இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொது விவாதத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது இன்று (புதன்கிழமை) பொது விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தனர்.
இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கொரியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைக்கு துணை நிற்பதாக ஜப்பான் கூறியது. ஐ.நா. விசாரணை அறிக்கை மட்டுமே தீர்வாக அமையாது என்ற கருத்தை இங்கிலாந்து தனது கருத்தை முன்வைத்தது.
இந்த விவாதத்தில் பசுமை தாயகம் சார்பில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், இலங்கை போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.
இறுதிக்கட்ட போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும், இன்னும் அங்குள்ள தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்வதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.