ரொம்ப கோபமா.. சண்டையா.. அம்மா வீட்டுக்கு போக தேவையில்லை.. நேரா இந்த கடைக்கு போய்ருங்க!
மன அழுத்தத்தை போக்க ஆங்கர் அறை பிரபலமாகி வருகிறது.
Recommended Video
பெய்ஜிங்: "ரொம்ப கோவமா இருக்கீங்களா... டோன்ட் ஒர்ரி.. நாங்க இருக்கோம்" என்கிறது ஒரு சீன நிறுவனம்.
யாருக்கெல்லாம் கோவம் வருகிறதோ, பக்கத்தில் கிடக்கும் பொருளை தூக்கி உடைப்பதுதான் முதல் வேலையே.
இதுக்கு நிறைய பலிகடா ஆவது வீட்டில் இருக்கும் நம்ம டிவி ரிமோட்தான். சில சமயம் நம் செல்போனும் இதற்கு விதிவிலக்கல்ல!! ஆத்திரத்தில் பொருட்களை இப்படி உடைப்பது உலகம் முழுக்க இருக்கும் அக்மார்க் பழக்கம் போல!
உடைக்கலாம்
சீனாவில் ஒரு ஸ்பெஷல் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்குள் நிறைய பொருட்கள் இருக்கும். யாருக்கெல்லாம் கோவம் வருதோ, அவர்கள் இந்த கடைக்குள் போகலாம். அங்கிருக்கும் பொருட்களை எப்படி வேண்டுமானாலும் தூக்கி போட்டு உடைக்கலாம். தங்களுக்கு கோபம் குறையும் வரை இந்த பொருட்களை உடைக்கலாம்.
எல்லாம் பழசுதான்
அதன்பிறகு கோபம் போய் மன அமைதி அடைந்தபிறகு கடையை விட்டு வெளியே வரலாம். இதுதான் அந்த கடையின் குறிக்கோளே!! எல்லாமே தூக்கி போட்டு உடைக்கும் பொருள் என்பதால், கடைக்குள் புதிய பொருட்கள் வைக்கவில்லை. எல்லாம் பழசுதான். இதற்காகவே தேவையற்ற பொருட்கள் விற்கும் கடைகளில் இதனை வாங்கி வைத்திருக்கிறார் இந்த கடை ஓனர். டிவி, வாட்ச், போன் என இப்படி எல்லா பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஆங்கர் ரூம்
இந்த கடைக்கு செல்பவர்கள் அதற்கான பணத்தை கட்டிவிட்டு, பிறகு அங்குள்ள பொருட்களை எடுத்து உடைக்கலாம். இதற்கு இந்திய ரூபாய் கணக்குப்படி 5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இப்படி ஒரு கடைக்கு ஆங்கர் ரூம் அதாவது கோப அறை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.பொருட்களை உடைக்கும்போது கஸ்டமர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரத்யேக பாதுகாப்பு உடைகள் தரப்படுகின்றன.
வன்முறை இல்லை
அதேபோல பொருட்களை உடைக்க உருட்டுக்கட்டைகள் தரப்படுகின்றன. உருட்டு கட்டை, சுத்தியல்களை வாடிக்கையாளர்களுக்கு தந்துவிட்டு, "வன்முறையை உருவாக்குவது எங்கள் நோக்கம் இல்லை" என்று ஓனர் இந்த கடை சம்பந்தமாக விளக்கம் சொல்கிறார். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த கடை ரொம்ப ஃபேமஸ் ஆகி வருகிறது. இதுவரை இந்த கடைக்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் வந்து துவம்சம் செய்துவிட்டு போகிறார்களாம்.
கல்யாண போட்டோக்கள்
இதில் ஹைலைட் என்ன தெரியுமா? நம்ம ஊரில் கல்யாணம் ஆன ஜோடி சண்டை போட்டு கொண்டால், கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை.. வீட்டில் சண்டை என்றால் போதும், முதல் வேலையாக இந்த கடைக்குதான் நேராக வருகிறார்கள். வரும்போது சும்மா வருவதில்லை. அவர்களின் கல்யாண போட்டோக்களை கையில் எடுத்து வந்து, அதை தங்களுக்கு முன்னால் வைத்துவிட்டு, ஆத்திரம் தீரும் வரை பொருட்களை அடித்து நொறுக்கி ஆவேசத்தை கொட்டி தீர்க்கிறார்கள்.
அரைமணி நேரம்
அப்படி பொருட்களை உடைக்கும்போது, அதற்கு ஆர்.ஆர். அதாவது ரீரிகார்டிங் மியூசிக் வாசிக்கப்படும். ஆத்திரத்தை காட்டி பொருட்களை உடைக்க மொத்தமே அரைமணி நேரம்தான். அதற்குள் மேலே நேரம் எடுத்து கொண்டாலோ, அல்லது பணத்தை உரிய பணத்தை கட்டவில்லை என்றாலோ கடையின் ஓனருக்கு கோபம் வந்துவிடும் என தெரிகிறது.
உருட்டை கட்டைகள்
ஆனால் நம்ம ஊரில், இப்படி குறிப்பிட்ட டைம் என இல்லாமல், பணத்தையும் செலவு பண்ணாமல், உருட்டை கட்டைகள் வீடுகளில் பறந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகளிலுமே ஆங்கர் ரூம் இருக்கத்தான் செய்கிறது!!