பைடன் பதவியேற்ற மறுநொடி.. மைக் பாம்பியோ உள்ளிட்ட டிரம்பின் முக்கிய அதிகாரிகளுக்கு தடை.. சீனா அதிரடி
பெய்ஜிங்: டிரம்ப் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 28 பேருக்கு தடை விதிப்பதாகச் சீனா அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த கடைசி நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவந்தது. கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டையும் டிரம்ப் சுமத்தியிருந்தார்.
அதேபோல, டிரம்ப் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் சீனா மீது தொடர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். சில நாட்களுக்குப் பின் ஜின்ஜியாங் பகுதியில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராகச் சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பொய்யான தகவல்
இதனால் இவர் மீது சீனா கடும் கோபத்திலிருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே மைக் பாம்பியோ உள்ளிட்ட 28 பேருக்குச் சீனா தடை விதித்துள்ளது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவிலுள்ள சில சீன எதிர்ப்பு அரசியல்வாதிகள், தங்கள் சுயநல அரசியல் நலனுக்காகச் சீனாவுக்கு எதிராகத் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தனர்.
28 பேருக்குத் தடை
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி இவர்கள் தலையிட்டனர். சீனாவின் நலன்களை மதிக்காமல் சீன மக்களைப் புண்படுத்திய வகையிலும் சீனா-அமெரிக்க உறவுகளைச் சீர்குலைக்கும் வகையிலும் இவர்கள் நடந்துகொண்டனர். எனவே, சீனாவின் இறையாண்மை பாதிக்கும் வகையில் செயல்பட்ட இந்த 28 பேரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சீனாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொழில் செய்யவும் தடை
மைக் பாம்பியோ தவிர டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகத் தலைவராக இருந்த பீட்டர் நவரோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் ராபர்ட் ஓ'பிரையன் மற்றும் ஜான் போல்டன், சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார், ஐ.நா தூதர் கெல்லி கிராஃப்ட், டிரம்ப் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பானன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள இந்த நபர்களும் இவர்களது குடும்ப உறுப்பினர்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவோவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது நிறுவனங்களும் சீனாவில் தொழில் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைக் பாம்பியோ குற்றச்சாட்டிற்கு பதில்
உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக மைக் பாம்பியோவின் குற்றச்சாட்டைச் சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் மைக் கூறுகையில், "பாம்பியோ கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பல்வேறு பொய்களைக் கூறிவந்தார். அதில் ஒரு பொய்தான் இது. அமெரிக்க அரசியல்வாதிகள் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்களை தாங்களே கோமாளிகளாக ஆக்கிக்கொள்கின்றனர்" என்று கடுமையாக விமர்சித்தார்.