முசாரப் கொலை முயற்சி வழக்கு: பெஷாவர் சிறையில் ஒருவருக்கு தூக்கு நிறைவேற்றம்!
பெஷாவர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப்பை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கில் மேலும் ஒருவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பாவி பிஞ்சு குழந்தைகளை தீவிரவாதிகள் படுகொலை செய்த பெஷாவர் நகரில் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் 2001-2008ஆம் ஆண்டில் அதிபர் பதவி வகித்தவர் ஜெனரல் முசாரப். இவரை ராவல்பிண்டியில் கடந்த 2003-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14-ந் தேதி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அவர் தப்பினார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சாக்லலா ராணுவ நீதிமன்றம் விசாரித்து நியாஸ் முகமது உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், நஸ்ருல்லா என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2005-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
ஆனால் பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்களின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் பெஷாவரில் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் 132 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் போட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனை மீதான இடைக்காலத் தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து முசாரப் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நிலையில் முசாரப் கொலை முயற்சி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நியாஸ் நேற்று வரை ஹரிபூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தான். திடீரென அவன், பெஷாவர் மத்திய சிறைச்சாலைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டான். இன்று காலை பெஷாவர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
ஏற்கெனவே தீவிரவாதிகளை பெஷாவர் நகரின் மையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.