ட்ரம்ப் விதித்த பயண தடை உத்தரவுக்கு மீண்டும் தடை.. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய பயண தடை மீதான மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சியேட்டில்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லிபியா, ஈரான், சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பலர் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே அமெரிக்க உச்சநீதிமன்றம் ட்ரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், ட்ரம்ப் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் 9-வது சுற்று நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அமெரிக்க குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ட்ரம்ப் அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
எந்த மதத்தினருக்கும் தடை விதிக்கும்படி, அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. எனவே அதனை அரசுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது.
எனவே, ட்ரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு தடை தொடரும் என்று ஆணையிட்டுள்ளது நீதிமன்றம்.