அண்டார்டிகா: கடல் நீர் உறைந்ததால் ஐஸ்கட்டிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட சொகுசுக் கப்பல்
மாஸ்கோ: ரஷ்ய சொகுசுக் கப்பல் ஒன்று அண்டார்டிகா கடலில் பயணம் செய்த போது திடீரென கடல் நீர் உறைந்து ஐஸ்கட்டியானதால், தனது பயணத்தை மேற்கொள்ள இயலாமல் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
ரஷியாவில் கட்டப்பட்ட ஆஸ்திரேலியாவின் பயணிகள் சொகுசு கப்பல் ஒன்று சுமார் 50 சுற்றுலா பயணிகள் மற்றும் 20 ஊழியர்களுடன் அண்டார்டிகா கடல் பகுதியில் பயணம் மேற்கொண்டது.
அப்போது, அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாக கடல் நீர் முற்றிலும் ஐஸ் கட்டியாக உறைந்தது. எனவே, கப்பல் ஊழியர்களால் அந்த கப்பலை மேற்கொண்டு நகர்த்த இயலவில்லை. ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கி கொண்டது அக்கப்பல்.
கடந்த சில நாட்களாக அந்தக் கப்பல் அங்கு சிக்கி நிற்பதாகவும், அதனால் கப்பலில் உள்ள பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கப்பலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.