எம்ஜிஆர் பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி.. ஓட்டுவேட்டை... ஆண்டிப்பட்டியில் இல்லை பாஸ்.. மலேசியாவில்!
எம்ஜிஆர் பாடலுக்கு கட்சி தலைவர் டான்ஸ் ஆடியுள்ளார்.
மலேசியா: மலேசியாவில் எம்ஜிஆரின் பாடல்கள் தற்போது அதிகமாக ஒலித்து வருகின்றன.
தன் வாழும் காலத்தில் தெரிந்து பாதி, தெரியாமல் பாதி என்று பலதரப்பட்டவர்களுக்கு உதவி செய்தவர் எம்ஜிஆர். அது ஒன்றுதான் அவரை காலத்துக்கும் அனைவராலும் நினைத்து பார்க்கும்படி செய்கிறது. அதனால்தான் நாடு கடந்து நேசிக்கப்படும் தலைவராகவும் அவர் மதிக்கப்பட்டு வருகிறார்.
எம்ஜிஆருக்கு கோயில்
அப்படித்தான் மலேசியாவிலும்! மலேசியாவை பொறுத்தவரை இந்தியர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் தமிழர்கள்தான் ரொம்ப அதிகம். இவர்கள் இன்னமும் எம்ஜிஆர் மிகுந்த பற்றை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் எம்ஜிஆருக்கு மலேசியாவில் ஒரு கோயிலே உள்ளது. மலேசிய நாட்டு அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் உடனே கையிலெடுப்பது நம்ம எம்ஜிஆர் பாடல்களைதான்.
எம்ஜிஆர் பாட்டு
தேர்தல் சமயங்களில் அங்கு பிரதான நகரங்கள், வீதிகளில் எம்ஜிஆரின் ஆடியோ பேச்சுதான்!! நகரின் சுவர்களில் சிரித்த முகத்துடன் எம்ஜிஆர் நிறைந்து காணப்படுவார். சாலைகளின் மூலை முடுக்கெல்லாம் எம்ஜிஆர் பேனர்களில் ஆளுயரமாக நின்று கொண்டிருப்பார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எம்ஜிஆரின் படமோ, பாடலோ, பேச்சோ இடம்பெறாமல் தேர்தலை நடத்தியதாக சரித்திரமே கிடையாது.
எங்கவீட்டு பிள்ளை
தற்போது செரி செடியா என்ற இடத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், தேசாமந்திரி என்ற பகுதியில், எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர், "எங்க வீட்டு பிள்ளை" படத்தில் வரும் 'நான் ஆணையிட்டால்' பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.
எப்பவுமே வாத்தியார்தான்
இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அன்வர் இப்ராஹிம் தன்னை மறந்து திடீரென அவரும் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார். இத்தனைக்கும் இவர் அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் ஆவார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எப்படியோ, தேர்தல் முடியும்வரை நம்ம "வாத்தியார்" பாட்டுகள் மலேசிய நகரையே சுற்றி சுற்றி வர போகுது!!