காஸா- ஏவுகணையை செயல் இழக்க செய்தபோது வெடித்து 2 நிருபர்கள் உள்பட 6 பேர் பலி
காஸா: வடக்கு காஸாவில் வெடிக்காமல் கிடந்த இஸ்ரேல் நாட்டு ஏவுகணையை செயல் இழக்கச் செய்தபோது அது வெடித்துச் சிதறியதில் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் கேமராமேன் உள்பட 6 பேர் பலியாகினர்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள பெய்ட் லாஹியா என்ற இடத்தை குறிவைத்து தாக்கிய ஏவுகணை வெடிக்காமல் போய்விட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் புதன்கிழமை அந்த ஏவுகணையை செயல் இழக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஏவுகணை வெடித்துச் சிதறியதில் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிக்கையின் கேமராமேனும், பாலஸ்தீன மொழிபெயர்ப்பாளருமான சிமோன் கெமிலி(35) உள்பட 5 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஏவுகணை வெடித்ததில் பலியானவர்களில் ஏஎஃபி பத்திரிக்கையின் காசா பிரிவில் பகுதி நேரமாக பணியாற்றிய பாலஸ்தீன மொழிபெயர்ப்பாளரான அலி ஷெஹ்தா அபு அபாஸ்(36) பலியானார். திருமணமான அவருக்கு மனைவி மற்றும் 7, 2 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
அண்மையில் பெய்ரூட்டுக்கு மாற்றப்பட்ட கெமிலிக்கு மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பிரபல வெடிகுண்டு நிபுணரான தாய்சீர் லாஹும் பலியானதாக காஸா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் சண்டையில் பலியான முதல் வெளிநாட்டு பத்திரிக்கையாளர் இத்தாலியைச் சேர்ந்த கெமிலி என்பது குறிப்பிடத்தக்கது.