பூமி மீது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து விழுந்து வாலாட்டிய வால் நட்சத்திரம்!
ஜோஹன்னஸ்பர்க்: பூமியின் மீது கிட்டத்தட்ட 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் வால் நட்சத்திரம் வந்து மோதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுதான் பூமியின் மீது வந்து மோதிய முதல் வால் நட்சத்திரம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதை விட முக்கியமானது இந்த வால் நட்சத்திரமானது வைரத்தால் நிரம்பியது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டின் மீது வெடித்துச் சிதறியது
இப்போது எகிப்து நாடுஇருக்கும் இடத்தில்தான் இந்த வைரத்தால் நிரம்பிய வால் நட்சத்திரமானது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதி வெடித்துச் சிதறியதாம்.
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இந்த கண்டுபிடிப்பை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதுதான் முதல் வாலாட்டம்...
பூமியின் மீது மோதிய முதல் வால் நட்சத்திரமும் இதுதானாம். இது கருப்பு நிறத்திலானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சூரியக் குடும்பத்தின் உதயம் குறித்த வெளிச்சம்
இந்த வால்நட்சத்திர மோதல் குறித்த விவரங்களை வைத்து எப்படி சூரியக் குடும்பம் உருவானது என்பதன் ரகசியத்தையும் அறிய முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வெடித்தபோது வெளிக்கிளம்பிய 2000 டிகிரி வெப்பம்
இந்த வால்நட்சத்திரம் வெடித்துச் சிதறியபோது அந்தப் பகுதியில் இருந்த அத்தனை உயிரினங்களும் பொசுங்கிப் போய் விட்டனவாம். மேலும் அந்த இடத்தில் 2000 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மிகக் கடுமையான வெப்பமும் வெளிக்கிளம்பியதாம்.
பூமியே அதிரும் அளவுக்கு அதிர்ச்சி
வால்நட்சத்திரத்தின் வெடிப்பால் பூமியே நடுங்கிப் போகும் அளவுக்கு பெரும் அதிர்ச்சி அலைகளும் அப்பகுதியில் பரவினவாம்.
புதிததாக தோன்ற சிலிக்கா படலம்
இந்த வால்நட்சத்திரத்தின் மோதலின் விளைவாக சஹாரா பாலைவனப்பகுதியில், கிட்டத்தட்ட 6000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மஞ்சள் நிற சிலிக்கா கண்ணாடிப் படலம் ஏற்பட்டதாம்.
மாபெரும் சிலிக்கா கண்ணாடி கண்டுபிடிப்பு
இப்படி ஏற்பட்டதால் உருவான சிலிக்கா கண்ணாடியின் மிகப் பெரிய பாலிஷ் செய்யப்பட்ட ஒரு படிவத்தை, எகிப்தின் பாரோ மன்னன் துட்டன்காமுன் தனது தலையில் உள்ள கிரீடத்தில் வைத்திருந்துள்ளான். அந்தக் காலத்தி்ல இந்த சிலிக்கா மிகப் பெரிய ஆபரணமாக பார்க்கப்பட்டுள்ளது.
பனியும், தூசும் கலந்தது
வால் நட்சத்திரம் என்பது பனியும், தூசும் கலந்த கலவையாகும். இது விண்வெளியில் வந்து செல்வது வழக்கமானதுதான். ஆனால் வால் நட்சத்திரத்தால் உண்டான ஒரு பொருள் பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதான் முதல் பொருளாகும் என்பதால் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கார்பன் துகள்கள்
இதற்கு முன்பு அன்டார்க்டிக் பனிப் பிரதேசத்தி்ல வால் நட்சத்திரத்தின் கார்பன் துகள்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு மிகப் பெரிய பொருள் தற்போதுதான் முதல் முறையாக கிடைத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான்
சில ஆண்டுகளுக்கு முன்புதான் எகிப்தில் கருப்பு நிற கூழாங்கல் துண்டுகள் விஞ்ஞானிகள் பார்வையில் பட்டது. சிலிக்கா கண்ணாடி உள்ள பகுதியில் அவை காணப்பட்டன. அதை ஆய்வு செய்தபோதுதான் இந்த வால்நட்சத்திர மோதல், அதன் விளைவாக ஏற்பட்ட சிலிக்கா படலம் ஆகியவை தெரிய வந்துள்ளது.
வைரமும் வந்ததாம்
இந்த வால் நட்சத்திரத்தின் மோதலால் பூமியில் வைரமும் பரவியதாகவும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கார்பனிலிருந்து பிறக்கும் வைரம்
இதுகுறித்து விஞ்ஞானி கிராமர்ஸ் கூறுகையி்ல், கார்பனிலிருந்து உருவாவதுதான் வைரம். வழக்கமாக இது பூமியின் அடி ஆழத்தில்தான் இருக்கும். காரணம், அந்த அளவுக்கு அழுத்தம், வைரம் உருவாவதற்குத் தேவை. அதேசமயம், மிகப் பெரிய அழுத்தத்தை வெளியிலிருந்து கொடுக்கும்போதும் நாம்வைரத்தை உருவாக்க முடியும். அப்படித்தான் இந்த வால் நட்சத்திரம் பூமியில் வந்து வெடித்தபோது ஏற்பட்ட அழுத்தத்தில் அப்பகுதியில் வைரமும் தோன்றியுள்ளது என்றார்.