கத்தாரில் 2 தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல்
தோகா: கத்தார் நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களின் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (சேலம்), செல்லதுரை பெருமாள் (விருதுநகர்) ஆகிய மூவரும் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே அந்நாட்டைச் சேர்ந்த மூதாட்டியைக் அவர்கள் கொலை செய்ததாகதக் கூறி 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அழகப்பா சுப்ரமணியன், செல்லத்துரை பெருமாள் ஆகிய 2 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் எந்த கொலையும் செய்யவில்லை என்றும், தாங்கள் நிரபராதி என்றும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக, அவர்களது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு சார்பில் சுமார் ரூ. 9.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
@SushmaSwaraj @sure1443 Appeal filed in Qatar Supreme Court against death sentence of Sh Subramanian & Chelladurai. Mission helped legal aid
— M.J. Akbar (@mjakbar) July 28, 2016
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.