வலுக்கும் எதிர்ப்பு.. அமெரிக்கா மீது பொருளாதார தடையா?.. அரபு நாடுகளின் திட்டம் என்ன!
ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததை அடுத்து அமெரிக்காவை பல நாடுகள் எதிர்க்க தொடங்கி இருக்கிறது.
ஜெருசலேம்: ஜெருசலேம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக நாடுகள் முழுக்க பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு முக்கிய தலைவர்களும் பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் 'கண்டிப்பாக ஜெருசலேம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் அரபு நாடுகள் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. லெபனான் இதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெருசலேம் பிரச்சனை
ஜெருசலேம் தொடக்கத்தில் முழுமையாக பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. தொடர் போரின் காரணமாக ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஆனாலும் டெல் அவிவ் என்ற பகுதியே இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
பிரச்சனை உருவானது
இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீன் அதிபர் முகமது அப்பாஸ் "அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்காது. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இன்னும் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும். எங்கள் பகுதியில் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்றே அதிபர் இப்படி செய்துள்ளார்'' என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார். இது இஸ்லாமிய நாடுகளிலும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
தடை
தற்போது லெபனான் எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்காவிற்கு எண்ணெய் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி செய்யக்கூடாது என்று நிறைய தடைகளுக்கு திட்டமிட்டு இருக்கிறது. மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை கொண்டு வரும் அமெரிக்கா மீது லெபனான் பொருளாதார தடை கொண்டு வர திட்டமிட்டு இருப்பது தற்போது உலக நாடுகள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அரபு நாடுகள் திட்டம்
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் லெபனானின் கோரிக்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க நாட்டிலேயே அதிபரின் அறிவிப்பிற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.