யாசர் அராபத் கதிர்வீச்சு படிமங்கள் மூலம் 'கொலை'? வல்லுநர்கள் தகவல்
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி தமது 75-வது வயதில் பிரான்ஸ் நாட்டில் இறந்தார். ஆனால், அவரது மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
ஆனால் 2006-ம் ஆண்டில் ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை பிரிவினரும், ரஷ்ய அரசின் விமர்சகருமான அலெக்சாண்டர் லிட்வினென்கோ படுகொலை செய்யப்பட்டபின் அராபத்தும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
உடல் பாகங்கள் தோண்டி எடுப்பு
இதனால், 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது உடற்பகுதியில் எஞ்சியிருந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளிலும் இந்த சோதனைகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
75 மாதிரிகள் சோதனை
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லுசேன் சட்ட மருத்துவ மையத்தின் கதிரியக்கப் பிரிவில் பணிபுரியும் 8 விஞ்ஞானிகள் மொத்தம் 75 மாதிரிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களின் முடிவுகளை கடந்த வார இறுதியில் தெரிவித்துள்ளனர்.
38 அராபத்தினுடையவை
இவற்றில் 38 மாதிரிகள் அராபத்தினுடையவை ஆகும். மீதி 37 மாதிரிகள் பத்து வருடங்களாக சுகாதாரமாகப் பாதுகாக்கப்பட்ட காட்டன் துணிகளின் மாதிரிகள் ஆகும்.
போலோனியம் படிமங்கள்
இவற்றில் அராபத்தின் ரத்தம், சிறுநீர்க் கறைகள் பட்டிருந்த துணிகளில் உயர் கதிர்வீச்சு தன்மை கொண்ட போலோனியம் படிமங்கள் இருந்ததை இந்தக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
அராபத் கொலை?
இதன்மூலம் அராபத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் உறுதி செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.