44,000 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பம்... உருகும் ஆர்க்டிக் ‘பப்பின்’ தீவு
ஆர்க்டிக்: ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார்.
ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருகின்றன. இது நிச்சயம் கவலைக்குரியது என்று அத்தனை ஆய்வுகளும் ஒரு சேர கூறுகின்றன.
அதிக வெப்பநிலை...
இந்த நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அபாயகரமான நிலை...
அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிறது.
கவலைக்குரியது...
இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக ஆய்வாளர் கிப்பர்ட் மில்லர் கூறுகையில், கனடிய ஆர்க்டிக் பகுதியில் வரலாறு காணாத வெப்ப நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இது நிச்சயம் கவலைக்குரியது என்றார்.
ரகசிய மாற்றம்...
மில்லரும், அவரது குழுவினரும்தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆவர். நமக்கு வெளியில் தெரியாமலேயே இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் மில்லர் குழுகவினர் கூறுகிறார்கள்.
ஹோலோசீன் காலம்...
11,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஹோலோசீன் காலத்திலேயே அதிக அளவிலான வெப்பநிலை தற்போது ஆர்க்டிக்கில் உள்ளது.
காற்றுக் குமிழி ஆய்வு...
பனிக் கட்டிகளுக்கிடையே அமிழ்ந்து கிடக்கும் காற்றுக் குமிழிகளை ஆய்வு செய்து தங்களது சோதனையை மில்லர் குழுவினர் நடத்தியுள்ளனர்.
ஐஸ்துண்டு சோதனை....
மேலும் ரேடியோகார்பன் டேட்டிங் சோதனையும் ஆய்வில் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் பப்பின் தீவில் உள்ள உருகிய ஐஸ் மலையின் துண்டை எடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
உருகும் பப்பின் தீவு....
கடந்த நூறு ஆண்டுகளாகவே ஆர்க்டிக்கில் உஷ்ணம் அதிகரித்து உருகி வருகிறது. அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக இது வேகமாகநடந்து வருகிறது. கிட்டத்தட்ட பப்பின் தீவு முழுவதுமே உருகிக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே இங்கு பனிக் கட்டிகள் கரைந்து போய் விடும் என்கிறார்கள்.