மிரட்டும் ஜிக்கா வைரஸ்: மிரளும் தடகள வீரர், வீராங்கனைகள்
ரியோ: ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிக்கா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் அவசர நிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
கர்ப்பணிகள் யாரும் தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வருவோர் குறைந்தது ஒரு மாதமாவது மனைவிகளுடன் உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமாகவும் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிகுறி
ஜிக்கா வைரஸால் தாக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தெரிவது இல்லை. இதனால் அவர்களுக்கு தங்களுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதே தெரிவது இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
காய்ச்சல்
சிலருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்படும். அதுவும் வைரஸ் தாக்கி சில நாட்கள் கழித்தே அறிகுறிகள் தெரியும். காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, கண் சிவப்பாகுதல் ஆகியவை ஏற்படும். அந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களில் சரியாகிவிடும். ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மனிதர்களை வைத்து மருந்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்ஸ்
ஜிக்கா வைரஸ் வேகமாக பரவியுள்ள பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. அப்போது பிரேசிலில் வெயில் காலம் என்பதால் கொசுக்கள் குறைந்த அளவே இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வீரர்கள்
ஜிக்கா வைரஸ் பரவுவதால் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளை தண்ணீர் அருகே செல்ல விடாமல் பயிற்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். போட்டியாளர்களும், பார்வையாளர்களும் பிரேசில் வர அஞ்சுவார்கள் என்று ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.