உங்கள் ஆதரவு கத்தாருக்கா? அல்லது எங்களுக்கா? நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி மன்னர்
ஜெட்டா: உங்கள் ஆதரவு கத்தாருக்கா? அல்லது எங்களுக்கா? என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் சவுதி மன்னர் சல்மான் கேட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதகாவும், ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பஹ்ரைன், யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளன.
மேலும் கத்தாருடனான ராஜாங்க ரீதியிலான உறவைத் முறித்துக் கொள்வதாகவும் அந்த நாடுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடன் கடல் மறும் வான்வழி போக்குவரத்தையும் அந்த நாடுகள் துண்டித்துக்கொண்டன.
இந்நிலையில் கத்தார் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் பொருட்டு சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார். ஜெட்டாவில் அந்நாட்டு மன்னர் சல்மானை நேற்று சந்தித்து நவாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சவூதி மன்னர் சல்மான், நவாஸ் ஷெரீப்பிடம் நேரிடையாக கேள்வி எழுப்பினார். உங்கள் ஆதரவு கத்தாருக்கா அல்லது சவுதி தலைமையிலான நாடுகளுக்கா என்பதை முதலில் முடிவு செய்யுமாறு கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உங்களின் முடிவை தெளிவாக விளக்க வேண்டும் எனவும் சல்மான் கூறியுள்ளார்.
கத்தார் பிரச்சினையில் சமாதானம் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஒமர் ஜாவேத் பாஜ்வாவுடன் குவைத், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்லவும் நவாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.