காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிட்டது அர்ஜென்டினா
44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது.
"தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படையின் பிரதிநிதியான என்ரீகே பால்பி கூறினார்.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலான ஆரா சன் குவான், கடைசியாக நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடர்பில் இருந்தது.
கடைசியாக கப்பல் இருந்த இடத்தின் அருகே வெடிப்பு நடந்திருக்கக்கூடும் என எழுந்த சந்தேகத்தையடுத்து, அதில் உள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை குறைந்தது.
தேடும் பணியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது ஏன்?
குழுவினரை உயிருடன் மீட்கும் சாத்தியக்கூறுகள் இல்லாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கேப்டன் பால்பி தெரிவித்தார்.
குழவினரின் விதி என்ன என்று தெரியவில்லை என்றும் அதோடு, "நீர்மூழ்கி காணாமல் போன பகுதிகளில், விபத்துக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.
தற்போது "சூழ்நிலை மாறிவிட்டதாக" தெரிவித்த பால்பி, ஆரா சன் குவான் காணாமல் போனது என்று கருதப்படும் பகுதியில், கடலுக்கடியில் கப்பலின் சிதைவு ஏதாவது உள்ளதா என்பதை பல கப்பல்களும், மற்ற சில நீர்மூழ்கி கப்பல்களும் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது?
காணாமல் போன் ஆரா சன் குவான், தென் அமெரிக்காவின் தெற்கு முனை பகுதிக்கு அருகில் ஊஸ்வாயாவில் வழக்கமான சேவையில் இருந்து, அதனுடைய தளமான பர்னஸ் அயர்ஸின் தெற்கிலுள்ள மார் டெல் பிலாடாவுக்கு டீசல்-மின்சார சக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் திரும்பி வந்து கொண்டிருந்தது.
கடலில் 430 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சன் குவான் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.
கப்பலில் இருந்தவர்கள் யார் யார்?
பெட்ரோ மார்டீன் ஃபெர்னான்டஸ் தலைமையில் 44 பேரைக் கொண்ட குழுவினர் நீர்மூழ்கி கப்பலில் இருந்தனர்.
அதில் 43 ஆண்கள் மற்றும் ஒரே ஒரு பெண். 35 வயதான, எலீனா மாரீ க்ராஃப்சிக் அர்ஜென்டினாவில் நீர்மூழ்கிக் கப்பலில் சேவை செய்த முதல் பெண் அதிகாரி ஆவார்.
கப்பல் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் மௌரீசியோ மார்க்ரி உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்
- சினிமா விமர்சனம்: திருட்டுப் பயலே-2
- கமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?
- இலங்கை கனமழையின் கோரதாண்டவம் (புகைப்படத் தொகுப்பு)