கல்வி கற்க வயது தடையில்லை... 99 வயதில் பள்ளிக்குச் செல்லும் அர்ஜெண்டினா பாட்டி..!
99 வயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார் அர்ஜெண்டினாவில் மூதாட்டி ஒருவர்.
பியூனஸ் அயர்ஸ்: கல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
பாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி!
தாயின் இறப்பு, திருமணம் என தொடர்ந்து ஏற்பட்ட தடைகளால் இசேபியாவின் பள்ளிக் கனவு நிறைவேறாமல் போனது. ஆனாலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் தனது 98வது வயதில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பள்ளியில் சேர்ந்தார்.
அப்பள்ளியில் வாசிக்கவும் எழுதவும் கற்று கொண்ட இசேபியா விரைவில் கணினியையும் உபயோகிக்க கற்று கொள்ள இருக்கிறார்.
குறைந்த வயதுள்ளவர்களே பல்வேறு உடல்நிலை குறைபாடுகளைக் காரணம் காட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலத்தில் விடுமுறை கேட்கையில், தற்போது 99 வயதாகும் இசேபியா இதுவரை ஒருநாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுத்ததில்லையாம்.
'முதுமையில் பல விஷயங்களை நாம் மறந்து விடுவோம். பள்ளி அட்டவணை எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் எழுதவும் வாசிக்கவும் எனக்கு கடினமாக உள்ளது' என தனது பள்ளி அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இசேபியா.
இசேபியாவின் இந்த செயல் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இளமையில் மட்டுமல்ல, முதுமையிலும் கற்கலாம் என்ற இசேபியாவின் ஆர்வத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.