பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க போகிறேன்.. புளோரிடா சம்பவத்தை அடுத்து டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது. முக்கியமாக ராணுவத்தில் இருந்து, பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் எளிதாக துப்பாக்கி வாங்கிவிடுகிறார்கள்.
இவர்கள் பொதுமக்கள் இருக்கும் இடமாக பார்த்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்கவே டிரம்ப் இந்த யோசனையை கூறியுள்ளார்.
புளோரிடா துப்பாக்கி சூடு
புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். 2012க்குப் பின் நடந்த மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.போலீஸ் அந்த 19 வயது கொலைகாரனை ஏற்கனவே கைது செய்துவிட்டது. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது.
கொடுக்க வேண்டும்
இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ''பள்ளிகளில் இனி துப்பாக்கி சூடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு கொடுக்கலாம்'' என்றார்.
எனக்கு தெரியும்
மேலும் ''எனக்கு தெரியும் எல்லோரும் இதை எதிர்ப்பார்கள் என்று. ஆனால் சொல்கிறேன் கேளுங்கள் இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எல்லா பள்ளிக்கும் அரசால் பாதுகாப்பு வழங்க முடியாது. ஆனால் துப்பாக்கி கொடுக்க முடியும். '' என்று குறிப்பிட்டுள்ளார்.
இறந்து இருக்க மாட்டார்
புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆரோன் பெய்ஸ் என்ற கால்பந்து பயிற்சியாளரும் மரணம் அடைந்தார். இவர் மாணவர்களை காப்பாற்ற போய் மரணம் அடைந்தார். ஒருவேளை இவரிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.