11 மணி நேரம்.. 4 தீவிரவாதிகள்.. 100 பிணைக்கைதிகள்.. காபூல் தாக்குதல் முடிவுக்கு வந்தது எப்படி?
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. அந்த ஹோட்டலில் இருந்த வெளிநாட்டு நபர்கள் இதில் அதிகம் குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை 6 பேர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் படாதபாடுபட்டு இருக்கிறது. மும்பை தாக்குதல் போலவே கோரமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.
2 தீவிரவாதிகள்
இந்த தாக்குதலில் நேற்று இரவே இரண்டு தீவிரவாதிகளை ராணுவம் கொலை செய்துவிட்டது. அவர்களை கொலை செய்து தான் அங்கு இருந்த முதல் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். இவர்கள் இருவரும் தரைத்தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
பெரிய போராட்டம்
ஆனால் மேல்தளத்தில் இருந்த தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறது. நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை அவர்களை பிடிக்க முடியாமல் திணறி உள்ளனர். அவர்களிடம் சிறிய ரக குண்டுகள் நிறைய இருந்துள்ளது.
வெளிநாட்டு பயணிகள்
இந்த இரண்டு பேர்தான் நிறைய வெளிநாட்டு பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்தார்கள். மேலும் ராணுவத்திடம் எதிர்த்தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் இருந்தார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
எப்படி
அதன்பின் ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மேல்தளத்திற்கு சென்றது. அங்கு இருந்து ஹோட்டலுக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. அதன்முலம் மீதம் இருந்த 2 தீவிரவாதிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மீதம் உள்ள ஒருவர் குறித்த தகவல் வெளியாகவில்லை.
முடிவுக்கு வந்தது
தற்போது இந்த தாக்குதல் முடிவுக்கு வந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை இதில் 6 பேர் மரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் இனிதான் தெரியும் என்று ஆப்கான் அரசு தெரிவித்து இருக்கிறது.