வங்கதேசத்தில் 1,151 பேர் சேர்ந்து எடுத்த உலகின் மிகப்பெரிய "கும்பி".. அதாவது கும்பலாக எடுத்த செல்பி
டாக்கா: வங்கதேசத்தில் 1,151 பேர் சேர்ந்து உலகின் மிகப் பெரிய செல்பி ஒன்றை சாதனை முயற்சியாக எடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் செல்பி மோகம் அதிகமாகக் காணப்படுகிறது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொண்டது போக, தற்போது குருப்பாக சேர்ந்து குரூப்பி எல்லாம் மக்கள் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் 1,151 பேர் சேர்ந்து செல்பி ஒன்றை எடுத்துள்ளனர். இதற்கு முன்னர் செல்பியில் இத்தனை பேர் பங்கேற்றது இல்லை என்பதால், இது உலக சாதனையாகக் கருதப் படுகிறது.
அதோடு, மைக்ரோசாப்டின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட் போனை விளம்பரப்படுத்தவும் இந்த செல்பி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இது தொடர்பான அறிவிப்பு மைக்ரோசாப்டின் லூமியா வங்கதேச பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே இந்த செல்பியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த உலகத்திலேயே மிகப் பெரிய செல்பி மைக்ரோசாப்டின் லூமியா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த செல்பிக்கு இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, அதிலும் சாதனை புரியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கு முன்னர், ஆஸ்கர் பட விழாவில் எடுக்கப் பட்ட செல்பி படமே 30 லட்சத்திற்கும் அதிகமான ரீட்வீட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.