அருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு
கோலாலம்பூர்: மலேசியாவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ள வழக்கறிஞர் அருணாச்சலம் காசி (அருண் காசி) தந்தை காசி அருணாச்சலம் செட்டியார், மலேசியா நாடாளுமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
மலேசியாவில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் அருண் காசி. அவர் மலேசியா, நாட்டின் பெடரல் நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக ஆன்லைன் வெப்சைட் ஒன்றில் 2 கட்டுரைகளை எழுதியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராகி, அருண் காசிக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார். இந்த நிலையில், அருண் காசி தந்தை, இது அநியாயம் என்று குற்றம்சாட்டுகிறார். இதுதொடர்பாக, அவர் அவர் பிரதமர் மகாதிர் பின் முகமதுவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
எனது மகன் பெடரல் நீதிமன்ற உத்தரவை விமர்சனம் செய்து எழுதிய கட்டுரை விவகாரத்தில், அவர் எந்த ஒரு தரப்பின் வழக்கறிஞரும் கிடையாது. எனவே அவருக்கு உள்நோக்கம் இல்லை. அட்டார்னி ஜெனரல் எனது மகனை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். ஆனால், அவரே இதுபோன்ற கருத்துக்களை கூறியவர்தான்.
நீதிமன்ற அவமதிப்பு என அட்டார்னி ஜெனரல் முன்வைக்கும் வாதம், நாகரீகமடைந்த நாடுகளில் நீக்கப்பட்டுவிட்ட சட்டம். ஏனெனில் அது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது. 2013ம் ஆண்டு, குற்றம் மற்றும் நீதிமன்றங்கள் என்ற சட்டத்தின்கீழ், பிரிட்டனில் நீதிமன்ற அவமதிப்பு சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.
எனது மகன் தனது வாதத்தை முன்வைக்க முடியாத சமையத்தில், அட்டார்னி ஜெனரல் வழக்கை நடத்தி வருகிறார். 2019ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி, மாலை 6.39 மணிக்கு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் காலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க எந்த ஒரு கோரிக்கையும், வைக்கப்படாமலே இப்படி விசாரிக்கப்பட்டது.
அட்டார்னி ஜெனரல் மனுக்களை உடனுக்குடன் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. மார்ச் 20ம் தேதி, அட்டார்னி ஜெனரல் தாக்கல் செய்த குறுக்கு விசாரணை மனுவை ஏற்று, 28ம் தேதியே குறுக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம், எனது மகனின் 15 வயதாகும் ஒரே குழந்தை, உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. எனவே விசாரணையை வேறு நாளுக்கு ஒத்திவைக்க எனது மகன் கோரிக்கைவிடுத்தார். அதை அட்டார்னி ஜெனரல் ஏற்கவில்லை.
கொலையாளி, பலாத்கார குற்றவாளிக்கு கூட தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க போதிய வாய்ப்பு கொடுக்கப்படும். ஆனால், எனது மகன் வழக்கிற்கு தயாராக போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை. எனது மகனின் வாக்குமூலம் 'சிஆர்டி' பதிவாக எடுக்கப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்திலும் ஒலிபரப்பாக வேண்டும். இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நடக்காவிட்டால், நாள் முழுக்க நாடாளுமன்றத்தில் எதிரே உண்ணாவிரதத்தில் அமர வேண்டியதாக இருக்கும். நான் கடவுள் மீதும், பிரதமர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். நியாயம் காப்பாற்றப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.