அல் கொய்தா இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலி.. உறுதி செய்தது ஆப்கன்
காபூல்: அல் கொய்தா இந்திய தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொலை செய்யப்பட்டார். அமெரிக்க-ஆப்கன் கூட்டுப்படை தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டதை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளின் கூண்டோடு ஒழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க படையினர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா காலா மாவட்டத்தில் செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 23ம் தேதி இரவுகளில் அல்கொய்தா தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது,
6 தீவிரவாதிகள் பலி
இந்த அதிரடி தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் 6 பேர் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநகரம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்தவர்
குறிப்பாக அல்கொய்தாவின் இந்திய தலைவரான அசிம் உமர் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. உமர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறியுள்ள ஆப்கானிஸ்தான், இவர் இந்தியாவில் பிறந்தவர் என்று சில தகவல்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.
தலைவராக இருந்தவர் உமர்
இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் போராளிகளைத் தூண்ட முயற்சியாக அல்கொய்தாகவின் கிளை 2014 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை வழிநடத்த உருவாக்கப்பட்டவர் தான் உமர். இவருக்கு நடுத்தர வயது இருக்கலாம் என கூறப்படுகிறது
|
அமெரிக்க படைகள் மறுப்பு
தீவிரவாதி உமர் சிரியாவுக்கு பயணம் செய்ததாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி முன்னதாக கூறியிருந்தார். ஆனால் இதுபற்றி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.