பசிபிக் கடலை கலக்கும் சூப்பர் சூறாவளி "மெய்சாக்".. படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!
வாஷிங்டன்: பசிபிக் கடலில் பயங்கரமாக வீசி வரும் சூப்பர் சூறாவளி என வர்ணிக்கப்படும் மெய்சாக்கை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்தப் படங்கள் பார்க்கவே படு திரில்லாக உள்ளது. சூறாவளியின் மையக் கண் பகுதியையும் அவர்கள் தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்.
தற்போது இந்த சூறாவளியானது மேற்கு பசிபிக் பெருங்கடலில் மணிக்கு 225 கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலமாக வீசி வருகிறது. இது பிலிப்பைன்ஸில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பிலிப்பைன்ஸ் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் படையினர், ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அனுப்பப் பட்டு வருகிறார்கள்.
5ம் எண் என்ற நிலையில் உள்ள இந்த சூறாவளியானது தற்போது லேசாக பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் இது முழுமையாக வலுவிழக்கவில்லை.
இந்த சூறாவளியானது கரையைக் கடக்கும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சூறாவளிக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.