நான் ஒரு 'ஓல்டு' ஸ்டூடன்ட்... 136 ஆண்டுகால ஜப்பான் பள்ளியில் மோடி 'கலகல'!
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான பள்ளிக்கு சென்ற பிரதமர் மோடி தன்னை வயது முதிர்ந்த ஒரு மாணவர் என்று குறிப்பிட்டு மாணவர்களை நெகிழ வைத்தார்.
ஜப்பான் நாட்டுக்கு 5 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் 136 ஆண்டுகால பழமையான டைமெய் என்ற அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்றார்.
ஜப்பானிய மொழி கற்பித்தல்
அங்கு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டம் குறித்து ஆவலுடன் கேட்டறிந்த மோடி, 21-ம் நூற்றாண்டை ஆசியாவுக்கே உரித்தானதாக ஆக்கும் நோக்கத்தில் இந்திய மக்களுக்கும் ஜப்பான் மொழியை கற்பிக்க இங்குள்ள ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜப்பான் ஆசிரியர்களுக்கு வரவேற்பு
இந்தியாவுக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு நேரில் பயிற்சியளிக்க விரும்பும் ஆசிரியர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் வரவேற்கப்படுவார்கள் என்றார் பிரதமர் மோடி.
வயது முதிர்ந்த மாணவன்
பின்னர் மாணவர்களிடம் பேசிய மோடி, ‘136 ஆண்டுகால பழைமையான இந்த தொடக்கப் பள்ளியில் கற்பதற்காக வயது முதிர்ந்த மாணவனாக நான் இங்கு வந்துள்ளேன்' என்று குறிப்பிட்டார்.
ஆன்லைன் கல்வித் திட்டம்
ஆன்லைன் மூலம் ஜப்பானிய கல்வித்திட்டத்தை இந்தியர்களுக்கு போதிப்பதன் மூலமாகவும், இங்குள்ள ஜப்பானியர்களுக்கு இந்தியப் பாடதிட்டங்களை கற்பிப்பதன் வாயிலாகவும் இரு மொழிகளுக்கிடையில் உள்ள பொது மற்றும் சமூக மதிப்பீடுகளை பரிமாறி, ஒட்டுமொத்த மானிட இனத்தை பயனுறச் செய்ய வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
பின்னர் மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு திரும்பினார் பிரதமர் மோடி ..