65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெறப் போகும் 13 குழந்தைகளின் தாய்
பெர்லின்: 13 குழந்தைகளுக்கு தாயான 65 வயது பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பத்தில் நான்கு குழந்தைகள் உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினைச் சேர்ந்தவர் ஆன்கிரெட் ரௌனிக்(65). ஆசிரியையாக உள்ள அவருக்கு 13 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 9 வயதாகும் அவரது கடைசி மகள் தனக்கு ஒரு தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என தனது தாயிடம் கேட்டுள்ளார்.
மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க நினைத்த ஆன்கிரெட்டுக்கு வயது ஒரு தடையாக தெரியவில்லை. இதையடுத்து அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கர்ப்பமாக முயன்று வெற்றியும் கண்டார்.
தற்போது கர்பப்பமாக உள்ள ஆன்கிரெட்டுக்கு 7 பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் கர்ப்பத்தில் நான்கு குழந்தைகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது வரை ஆன்கிரெட்டுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் கோடை காலத்தில் அவர் குழந்தைகளை பெற்றெடுத்துவிடுவார். அவ்வாறு பெற்றால் அதிக வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற பெண் என்ற பெருமையை பெறுவார் ஆன்கிரெட்.