பிலிப்பைன்ஸ்: ‘ஹையான்’ புயலில் சிக்கி 10,000 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலில் சிக்கி சுமார் 10 ஆயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாமென அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரை நகரங்களைக் கடந்த 8ம் தேதியன்று ஹையான் புயல் சுமார் 315 கி.மீட்டர் வேகத்தில் தாக்கியது. புயலில் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1200 பேர் பலியாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால், புயலில் சிக்கி 10 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாமென போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு பெருத்த பொருட் சேதமும் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்ட போதும் இவ்வளவு பேர் பலியானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும், புயல் பாதித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப் பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைவதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளது. இதன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது.
தனது வரலாற்றிலேயே பிலிப்பைன்ஸ் சந்தித்திருக்கும் மிக மோசமான புயல் இதுவென கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் தனது கோர முகத்தைக் காட்டிய ஹையான் புயல் தற்போது தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி செல்வதாகவும் தொடர்ந்து சீனாவை தாக்கப்போவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சீனா ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.