பறந்த 2 நிமிடத்தில் நொறுங்கிய இந்தோனேசியா விமானம்… 116 பேர் கருகி உயிரிழந்த சோகம்
ஜகர்தா: இந்தோனேசியாவில் விமானப்படை விமானம் ஹோட்டல், வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற 2 நிமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி-130 ஹெர்குலிஸ் ரக விமானங்கள், இந்தோனேசிய விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில் தயாரான இந்த விமானத்தை விமானப்படை வீரர்களை ஏற்றிச்செல்வதற்கும், தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும் இந்தோனேசியா பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானப்படை விமானம் செவ்வாய்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.08 மணிக்கு, சுமத்ரா தீவில் மேடன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நாடுனா தீவுக்கு 113 பேருடன் புறப்பட்டு சென்றது. இதில் 3 விமானிகள் உள்பட 12 பேர் சிப்பந்திகள். 101 பேர் பயணிகள். அவர்கள், விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவார்கள்.
இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானப்படை தளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது விழுந்து, நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து பலத்த சேதம் அடைந்தன.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானதால் ஒருவருமே உயிர் பிழைக்க முடியாமல் போய்விட்டது. விமானத்தில் பயணம் செய்த 113 பேரும் கூண்டோடு கருகி பலியாகி விட்டனர். இந்த விபத்தில் பொதுமக்களில் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.
விமான விபத்துக்கு இயந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் விபத்துக்குள்ளான விமானம், 51 ஆண்டு பழமையானதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்தோனேசியா நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‘டுவிட்டர்' வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு பொறுமையையும், பலத்தையும் கொடுக்க வேண்டும். இத்தகைய பேரிடர்களில் இருந்து இனி நாம் காக்கப்படுவோமாக" என்று கூறியுள்ளார்.