இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 4 பள்ளி குழந்தைகள் உள்பட 14 பேர் பலி
ஜகர்தா: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 4 பள்ளிக்குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவில் உள்ள தெற்கு சுமத்ராவில் இருக்கும் காரோ அருகில் இருக்கும் சினாபங் எரிமலை கடந்த செப்டம்பர் மாதம் மூதல் சீறிக் கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் உள்ளூர் மக்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் தங்கள் வீடுகளுக்கு அவ்வப்போது சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த எரிமலை வெடித்ததில் 4 பள்ளிக்குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகினர். இந்த சீற்றத்தில் மேலும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் எரிமலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் உடல்களை தேட முடியவில்லை.
கடந்த 400 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சினாபங் எரிமலை கடந்த 2010ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.