கினியாவில் ராப் இசைக்கச்சேரியில் கூட்டநெரிசல்... 24 பேர் பலி - 7 நாள் அரசு துக்கம் அனுஷ்டிப்பு!
கொனாக்ரி: கினியாவில் நடந்த ராப் இசைச் கச்சேரியில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டு அரசு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப் படுவதாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகரான கொனாக்ரியின் வடக்கு ரத்தோமா புறநகர் கடற்கரையில் இன்ஸ்டிங்ட் கில்லர்ஸ் என்ற இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 13 பெண்கள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அரசு, 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க அறிவித்துள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதுமின்றி இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த அதிகாரி ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.