ஏமனில் பக்ரீத் தொழுகையின் போது மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு... 29 பேர் பலி
சானா: ஏமன் தலைநகர் சானாவில் இன்று பக்ரீத் பெருநாளை முன்னிட்டு தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது மசூதி ஒன்றில் பயங்கரமாக குண்டுகள் வெடித்ததில் 29 பேர் பலியாகினர்.
ஏமனில் கவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது செளதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி ஒடுக்கி வருகின்றன. இன்று பக்ரீத் பெருநாளையொட்டி ஏமன் தலைநகர் சானாவின் அல் பிலாலி என்ற இடத்தில் உள்ள மசூதியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென கூட்டத்துக்கு நடுவே பயங்கர சப்தத்துடன் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 29 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டுவெடித்த மசூதியில் சியா, சன்னி இருபிரிவு இஸ்லாமியர்களுமே வழிபாடு நடத்தி வந்தனர். ஏமனில் கடந்த 3 மாதங்களில் 6வது முறையாக மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.