சீனாவில் அதிவேக நெடுஞ்சாலையில் லாரியுடன் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 36 பேர் சாவு
பெய்ஜிங்: சீனாவில் லாரியுடன் பேருந்து மோதிய பயங்கர விபத்தில 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவில் மோசமான சாலை விபத்துக்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அங்கு போக்குவரத்து விதிமுறைகள் பெரும்பாலும் மீறப்படுவதுடன், பல விதிமுறைகள் செயல்படுத்தப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.
சீன அரசு கணக்கு படி 2015 ஆம் ஆண்டில் மட்டும் சீனா முழுவதும் 58,000 பேர் விபத்துக்களில் கொல்லப்பட்டு உள்ளார்கள். போக்குவரத்து சட்டங்களின் மீறல்களே கிட்டத்தட்ட 90 சதவீத விபத்துக்களுக்கு காரணம் ஆகும். சாலை விதிகள் மீறப்படுவதன் காரணமாகவே அங்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுவது அதிகமாகிவிட்டது.
இந்நிலையில் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை 69 பேருடன் சென்ற பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோரசம்பவத்தில் நிகழ்விடத்திலேயே 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் டயர் வெடித்ததே லாரி மீது மோதி விபத்துக்குள்ளாக காரணம் என்பது தெரியவந்துள்ளது,