பிரான்ஸ்: மக்கள் கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து பயங்கர தாக்குதல்- 80 பேர் பலி!
நைஸ்: பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய டிரக் ஒன்று வெடித்து சிதறியத்தில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ்சில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
நைஸ் நகரில் இந்த வாண வேடிக்கையைக் காண நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வெடிபொருட்களுடன் வந்த டிரக் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து பயங்கரமாக வெடித்தது.
இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அதிபர் ஹோலண்டே அறிவித்துள்ளார்.