ஏமனில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்... ராணுவத்தினர் 6 பேர் பலி
ஏடென்: ஏமன் நாட்டில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள ஏடென் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராணுவ தளத்தில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளதாவது: ஏடென் சர்வதேச விமான நிலையத்தினை ஒட்டியுள்ள ராணுவ தளத்தினை இலக்காக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராணுவ தளத்தின் நுழைவு பகுதியில் ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தை உள்ளே நுழைய செய்து அதனை வெடிக்க செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ராணுவத்தினை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த கார் தாக்குதலை தொடர்ந்து, அங்கு பதுங்கியிருக்குத் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். ரமலான் பண்டிகையையொட்டி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் 27-ந் தேதி அந்நாட்டின் தெற்கு துறைமுக நகரான முகாலாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.