பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
ஜெனீவா: பாகிஸ்தான் நாட்டில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாடு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐநாவில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள கிராமத்திலுள்ள இந்து கோயிலை அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் இடித்து தீ வைத்தனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து கோயிலுக்கு தீ வைக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலிருந்து இஸ்லாமிய மத போதகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் அரசு செலவில் கட்டித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
குறிவைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள்
இந்நிலையில், இந்த விஷயத்தை ஐநா சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. அனைத்து மத தலங்களையும் பாதுகாத்து அமைதி மற்றும் சகிப்புத்தன்மை மூலம் அனைத்து கலாசாரங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட இந்தியா, வளர்ந்து வரும் பயங்கரவாதம், வன்முறை, சகிப்பின்மை ஆகியவற்றால் மத தலங்கள் அதிகம் குறி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தது.
இந்தியா குற்றச்சாட்டு
இது குறித்து ஐநாவில் பேசிய இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி, "பன்முக கலாசாரத்தை கொண்ட ஒரு நாடாக, இந்தியா அனைத்து மத மற்றும் கலாசார உரிமைகளையும் பாதுகாக்கிறது. இங்குள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் முறையாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், கராக் நகரில் உள்ள இந்து கோயில் தாக்கப்பட்டபோது பாகிஸ்தான் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தான் பதில்
குறிப்பிட்ட மத தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கிறது. இது மாதிரியான நடவடிக்கை மூலம் ஒருபோதும் உண்மையான அமைதியை வளர்க்க முடியாது" என்றார். இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் தூதர், இந்தியா தன் மீது ஆதாரமற்ற, தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகத் தெரிவித்தார்.
ஐநா ஆதரிக்கக் கூடாது
மத தலங்கள் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் கண்டிக்கத்தக்கவை என்றும் குறிப்பிட்ட இந்தியா, அவ்வாறு நடைபெறும் தாக்குதல்களில் குறிப்பிட்ட மத தலங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிராக சில நாடுகள் நடவடிக்கை எடுப்பதாகவும் ஐநா இது போன்ற நடவடிக்கைகளை ஆதரிக்கக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியது. அவ்வாறு ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால் உலகில் ஒருபோதும் ஒற்றுமையையும் பன்மைத்துவத்தையும் வளர்த்தெடுக்க முடியாது என்றும் திருமூர்த்தி கூறினார்.