புதிய ஆட்சியில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: யு.எஸ். எம்.பி.
வாஷிங்டன்: கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கிறிஸ்தவ சிறுபான்மையின சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோ பிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜோ பிட்ஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவில் மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பன்மைத்துவம் தற்போது சகிப்புத்தன்மையின்மமை, பிரிவினை, பெரும்பான்மைத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிய அரசு பதவியேற்ற 100 நாட்களிலேயே சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக இந்து தேசியவாதிகள் நடத்தும் தாக்குதல் அதிகரித்துவிட்டது.
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தவிர முஸ்லீம்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 38 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. அதிலும் டிசம்பரில் மட்டும் 31 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
தேவாலயங்கள் எரிப்பு, தாக்குதல், பாதிரியார்கள் கைது ஆகியவற்றால் இந்திய சமூகம் ஆட்டம்கண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒபாமா நிர்வாகம் தான் முன்வந்து பேச வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் பற்றி பேச வேண்டும் என்றார்.