கர்நாடக வாழ் தமிழர்கள் மீது தாக்குதல்: சுவிட்சர்லாந்து சைவத் தமிழ்ச் சங்கங்கள் கண்டனம்
சூரிச்: கர்நாடக வாழ் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறியைக் கண்டித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள சைவத் தமிழ்ச் சங்கம், பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்னில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை அறங்கால் செய்து வரும் சைவத்தமிழ் அமைப்பு சைவநெறிக்கூடம் ஆகும்.
ஞானலிங்கேச்சுரத்தில் சைவநெறிக்கூடத்தால் 17. 09. 2016 வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுவழிபாட்டில் கர்னாடகா வாழ் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறிச்செயல்களைக் கண்டித்து சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவில் - சைவத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கண்டன அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது.
இதேவேளை இக்கூட்டுக் கண்டன அறிக்கை சுவிற்சர்லாந்தின் பொருளாதர நகரமாகக் கருதப்படும் சூரிச் மாநிலத்தில் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டு நிறைவிலும் வாசிக்கப்பட்டது.
ஞானலிங்கேச்சுரத்தில் பலநூறு சைவத் தமிழ் அடியார்கள் கூடியிருந்து நடைபெற்ற அன்றைய பொது வழிபாட்டின் பலன் கர்னாடகாவில் எம் தமிழ் உறவுகள் எதிர்கொள்ளும் இன்னலை போக்குவதாக அமைய ஞானலிங்கேச்சுரரிடம் வேண்டுவதாக திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் தெரிவித்திருந்தார்.
முழுமதி சிறப்பு வழிபாடும், வெள்ளிக்கிழமைப் பொதுவழிபாடும் இணைந்து நடந்த இந்நாளில் பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர். மேலும் பொதுவழிபாட்டின் நிறைவில் மேற்காணும் கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கியராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த சைவசிந்தாந்தப் புலவர் பாவலர். திருநிறை. கந்தையா மனோகரன் அவர்கள் கர்னாடகா வாழ் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல் தொடர்பாகவும், பாரதக்கண்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட வரலாற்று உவமைகளையும் எடுத்துக்காட்டி, இன்றை தமிழர்களின் நிலைக்கு வரலாற்றில் ஏற்பட்ட தவறுகளை தன் கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தார்.
'சிந்து நதியின்' எனத் தொடங்கும் பாடலில் பாரதியார் கண்ட கனவு, இன்று வெறும் கனவாகப் போனதையும், திராவிட மாயையில் தமிழர்கள் தமிழகத்தில் தமிழ் அடையாளம் இழந்ததையும் மீள்மீட்டி அடியார்கள் எண்ணத்தை தூண்டினார்.
நிறைவில் உலகெங்கினும் வாழும் தமிழர்கள் யாவரும் ஒற்றுமை என்ற பொருளில் தொடர்ந்து நின்று, மக்கள் ஆட்சி ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் பொது உரிமைகள் முழுவதையும் பயன்படுத்தி எங்கள் உரிமைகளை எங்களுக்கும், எதிர்வரும் எம் இளந்தமிழ்ச் சமூகத்திற்கும் படைத்தளிக்க வேண்டும் எனும் வேண்டுதலும் திருக்கோவில் வழிபாடும், கண்டன அறிக்கை வாசித்தளித்தலும் நிறைவுற்றது.