பிரசார கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை சுட்டு கொல்ல முயன்ற இளைஞர்.. விசாரணையில் திடுக் தகவல்கள்
வாஷிங்டன்: குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை சுட்டு கொல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரிட்டன் நாட்டு இளைஞரை ஜூலை 5ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாஸ்வேகாஸ் பகுதியிலுள்ள டிரசர் ஐஸ்லேன்ட் கேசினோவில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த மைக்கேல் ஸ்டீவன் சேன்ட்போர்ட் என்ற 20 வயது இளைஞர், பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளார்.
ஆனால், போலீசார் அந்த வாலிபரின் முயற்சியை முறியடித்து துப்பாக்கி அவரது கைக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டனர். பொது இடத்தில் வன்முறை முயற்சியில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டின்பேரில் வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்
விசாரணையில் கிடைத்த தகவல்களை நெவடா கோர்ட்டில் போலீசார் சமர்ப்பித்துள்ளனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பழக்கம்
கலிபோர்னியாவில் இருந்து ட்ரம்பை கொல்லவே, மைக்கேல் ஸ்டீவன் சேன்ட்போர்ட், லாஸ்வேகாஸ் வந்ததாகவும், இதற்கு முன்பு துப்பாக்கியில் சுட்டு பழக்கம் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.
அடுத்த டிக்கெட் ரெடி
லாஸ்வேகாஸ் நிகழ்ச்சியில் ட்ரம்ப்பை கொல்ல முடியாவிட்டால் அடுத்தகட்டமாக போனிக்ஸ்சில் நடைபெற உள்ள கூட்டத்தில் வைத்து கொல்ல அவர் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக போனிக்ஸ் கூட்டத்திற்கு டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
காவலில் குற்றவாளி
நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மைக்கேல் ஸ்டீவன் சேன்ட்போர்டை, ஜூலை 5ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தீவிர விசாரணை
பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் ஸ்டீவன் சேன்ட்போர்ட் எதற்காக கொலைவெறியோடு சுற்றிக்கொண்டுள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்பை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.