எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது!
Recommended Video
பெர்லின்: டீசல் எமிஷன் (வாகனத்தின் புகை உமிழ்தல்) மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆடி. ஆடம்பர கார்கள் ஆடி பிராண்டின்கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வோக்ஸ்வேகன் கார்களில் எமிஷன் சோதனையில் முறைகேடு நடைபெறும் வகையில் அதில் கருவிகள் இருந்தது அம்பலமானது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தங்களின் 600,000 கார்களில் இந்த கருவி பொருத்தப்பட்டதாக ஜெர்மனியின் முன்னணி கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் ஒப்புக்கொண்டது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
11 மில்லியன் டீசல் கார்களில் மோசடியுடன் கூடிய சாப்ட்வேர் இணைக்கப்பட்டதாகவும், எப்போது கார்கள் சோதனை செய்யப்பட்டன எப்போது எமிஷன் குறைத்து காட்டப்பட வேண்டும் என்பதெல்லாம் பதிவாகியுள்ளது அந்த சாப்ட்வேர் என்றும், வோக்ஸ்வேகன் தெரிவித்திருந்தது.
சோதனை கூடத்தில் சோதித்து பார்க்கும்போது இருப்பதைவிட, சாலைகளில் ஓடத் தொடங்கிய பிறகு வோக்ஸ்வேகன் கார்கள் சுமார் 40 மடங்கு அதிக புகையை உமிழக் கூடியவையாக இருந்தது தெரியவந்தது.
இந்த மோசடி ஆடி நிறுவன கார்ககளிலும் அரங்கேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆடியின் ஏ6 மற்றும் ஏ7 மாடல்களின் 60,000 கார்களில் டீசல் இன்ஜின் எமிஷன் சாப்ட்வேர்களில் பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஆடி நிறுவனம் ஒப்புக்கொண்டது. கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறி, 8,50,000 கார்களை ஆடி நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில்தான் 'ஆடி' கார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதை வோக்ஸ்வேகன் செய்தித்தொடர்பாளரும் அறிவித்துள்ளார். சாட்சியங்களை அவர் கலைத்துவிட கூடும் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக முனிச் நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.