படகு மூலம் ஆஸி.யில் தஞ்சமடைய வந்த 18 இலங்கை நாட்டவர் நாடு கடத்தல்!
கான்பெரா: படகு மூலம் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த 18 இலங்கை நாட்டவர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
18 பேரும் ஈழத் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்பது தெரியவில்லை. நாடுகடத்தப்பட்ட 18 பேரும் இன்று (ஜூலை 17) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் தகவலின்படி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து கிளம்பிய சிறப்பு விமானத்தில் 18 இலங்கை நாட்டவருடன் 36 ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்தனர்.
முன்னதாக இந்த 18 பேரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றதற்காக பப்புவா நியூ கினிவாவில் உள்ள தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. இதன்படி படகு மூலம் தஞ்சமடையும் நோக்கில் யார் வந்தாலும் அது அனுமதிப்பதில்லை. மாறாக தடுத்து நாடு கடத்தி விடுகிறது.
கடந்த காலங்களில், போர்ச் சூழல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடல் வழியாக தஞ்சமடைந்தனர். இப்போதும் சிலர் முயற்சித்தபடி உள்ளனர். சமீப ஆண்டுகளாக, விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் அதன் காரணமாக அச்சுறுத்தலை சந்திப்பதாகவும் கூறி சிங்களவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது நடந்து வருகின்றது. எனவே, தற்போது நாடுகடத்தப்பட்ட 18 பேர் தமிழர்களா? அல்லது சிங்களவர்களா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.