கரப்பான்பூச்சியைக் கொல்ல நினைத்தபோது விபரீதம்.. பற்றி எரிந்த வீடு... இளைஞர் படுகாயம்!
கரப்பான்பூச்சிகளைக் கொல்ல நடந்த முயற்சியில் வீடு எரிந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் கரப்பான்பூச்சியை கொல்ல முயன்று, வீட்டையே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லை தாங்க முடியாமல் தவித்து வந்தார். கரப்பான்பூச்சிகளை ஒழிக்க திட்டமிட்ட அவர், கடைக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வந்தார்.
புதன்கிழழை இரவு வீட்டின் சமையலறையில் மருந்து ஸ்ப்ரே செய்து கரப்பானை ஒழிக்கத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அடுப்பில் எரிந்துகொண்டிருந்த தீயில் மருந்து பட்டு தீப்பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியதால், பதற்றமடைந்த அவர் கூச்சலிட்டார். இதை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை வெளியே இழுத்து வந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் அந்த இளைஞருக்கு தலை மற்றும் நெஞ்சு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. சமையலறை மற்றும் வீட்டின் முன்பகுதி ஆகியவை தீயில் கருகி நாசமாயின.
இந்த சம்பவம் குறித்து, ஆஸ்திரேலிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துபவர்கள் அதனை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.