மக்களின் அச்சத்தை போக்க... முதல் நபராக தடுப்பூசி எடுத்துக்கொண்ட.. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்
மெல்போர்ன்: கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ள நிலையில், முதல் நபராக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகள், வைரஸ் பரவலை அதிகரித்துள்ளது. இருப்பினும், சில நாடுகள் வைரஸ் பரவலை விரைவாகவே கட்டுப்படுத்தின.
அப்படி கொரோனா வைரசை மிக விரைவாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் சிறப்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன் பின்னர், ஹோட்டல் ஊழியர்கள். போலீசார், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பொய் பிரச்சாரம்
இருப்பினும், அந்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோன தடுப்பூசியைப் பொதுமக்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சிலர் தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர்
இந்நிலையில், பொதுமக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கையை இது அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கும் பொது மக்கள் மத்தியில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா திட்டம்
அந்நாட்டிலுள்ள 2.5 கோடி மக்களுக்கு வரும் அக்டோபர் மாத்திற்குள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்து அந்நாட்டு அரசு பயன்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.