புழக்கத்தில் விடப்பட்ட டாலர் நோட்டுகளில் எழுத்துப்பிழை... தர்மசங்கடத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி!
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில், புழக்கத்தில் விடப்பட்ட புதிய டாலர் நோட்டுகளில் எழுத்துப்பிழை இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 டாலர் நோட்டை வெளியிட்டது. மஞ்சள் வண்ணத்தில் வெளியிடப்பட்ட இந்த டாலர் நோட்டில் இடம்பெற்ற ஆங்கில வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரேடியோ நிலையம் ஒன்றின் நேயர் ஒருவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, அந்த ரேடியோ நிலையம் இன்ஸ்டாகிராமில் எழுத்துப்பிழை குறித்து பதிவு போட்டது. இந்த பதிவு வைரலானது. இதுகுறித்து ஆய்வு செய்த ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த புதிய 50 டாலர் நோட்டின் கீழ் பகுதியில் 'RESPONSIBILITY' என்பதற்கு பதிலாக 'RESPONSIBILTY' என்று அச்சிடப்பட்டுள்ளது. அதாவது, அந்த ஆங்கில வார்த்தையில் L மற்றும் T ஆகிய எழுத்துக்களுக்கு இடையில் I என்ற எழுத்து விடுபட்டுள்ளது.
இந்த நோட்டு வெளியிடப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போதுதான் இந்த எழுத்துப்பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்திருப்பதுடன், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் உறுதி தெரிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.2,250 கோடி அளவுக்கு எழுத்துப்பிழையுடன் கூடிய 46 மில்லியன் 50 டாலர் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் திரும்ப பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
பொதுவாக, பணம் மற்றும் நாணயங்கள் அச்சடிப்பதில் ஈடுபடும் அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்படுவர். ஆனால், எழுத்துப்பிழையுடன் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி டாலர் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.