ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை! வெள்ளத்தால் பலர் வீடிழப்பு, மின் இணைப்பு துண்டிப்பு
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரு வெள்ளம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவருகிறார்கள். மின்சார இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணாங்களை புயல் புரட்டிப்போட்டுக் கொண்டுள்ளது. டாஸ்மேனியா பகுதியில் 7 நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் இதுவரை 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகே நின்றவர்கள், கார்களில் இருந்தவர்கள் என பலரையும் கடுமையான வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது.
3 நாட்களுக்கு தேவையான ஆடைகளை எடுத்துக்கொண்டு, வீடுகளில் மின்சார உபகரண சுவிட்சுகளை ஆப் செய்துவிட்டு, சமையல் காஸ் இணைப்பையும் ஆப் செய்துவிட்டு வெளியேறுமாறு வெள்ளம் பாதித்த பகுதியிலுள்ள மக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், கடல் அலைகள் 12 மீட்டர் உயரத்திற்கு எழும்பியபடி உள்ளன. மழை, வெள்ளம் காரணமாக, இம்மாகாணங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தை போலவே சில தினங்கள் முன்பு பாரீஸ், ஜெர்மனி நாடுகளிலும் மழை, வெள்ளம் புரட்டிப்போட்டது. இப்போது ஆஸ்திரேலியாவிலும் அதேபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.