எபோலா... மேற்கு ஆப்பிரிக்க நாட்டினரே தயவு செய்து இங்கே வராதீங்க - ஆஸி.!
சிட்னி: எபோலா நோய் பாதிப்புள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது எபோலா நோய். உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளது. இந்நோய்க்கு இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நோயின் தாக்கம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லியோனே, கினியா மற்றும் நைஜீரிய நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது இந்நோயின் தாக்கம் தெரிய ஆரம்பித்துள்ளது.
எனவே, எபோலா தங்கள் நாட்டிற்குள் நுழைந்து விடா வண்ணம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலியா. அதன் ஒரு கட்டமாக, எபோலா பாதிப்புள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டினருக்கு விசா வழங்குவதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
எபோலா பாதிப்புள்ள நாட்டினரிடம் இருந்து வரும் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியாது என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மாரிசன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மேற்கு ஆப்பிரிக்க நாட்டினருக்கான நிரந்தரமற்ற அல்லது தற்காலிக விசா ரத்து செய்யப்படுவதுடன், ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் வந்துசேராத நிரந்தர விசாதாரர்கள், இனிமேல் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை யாருக்கும் எபோலா நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றபோதும், அங்கு இந்த நோய் பற்றிய அச்சம் பரவலாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.