ஆஸி.யில் அடைக்கலமான ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த ஒப்பந்தம்!
ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடைக்கலமான ஈழத் தமிழர் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள், ஆப்கான், ஈரான் நாட்டவர்கள், ஆப்பிரிக்கர்கள் என பலரும் சட்டவிரோதமாக மீன்பிடி படகுகள் மூலமாக உயிரை பணயம் வைத்து அகதிகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவது தொடர்ந்து வருகிறது.
இந்த ஆபத்தான கடல் பயணத்தில் உயிரிழந்தவர்களும் ஏராளம். தமிழகத்தில் ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இப்படி வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களும் உண்டு.
இப்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகள் அனைவரும் பாபுவாநியூ கினியாவின் நவரு தீவு மற்றும் மனுஸ் தீவு ஆகியவற்றில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த அகதிகளில் ஒரு பகுதியினரை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் டர்ன்புல் கூறியுள்ளார்.
ஆனால் எத்தனை பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகதிகள் குடியமர்த்துவது என்பது பரிசீலிக்கப்படும் என்றார்.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடவில்லை. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேரை வெளியேற்றுவேன் என அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இப்புதிய ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.