“நீ ஏன் சாகக்கூடாது?”.. பாத்ரூமில் அலறிய நபர்.. பதறிப் போய் ஓடி வந்த போலீஸ் ஷாக்!
சிலந்தி பயத்தால் அலறிய நபரால் பெர்த் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
சிட்னி: பாத்ரூமில் இருந்த சிலந்தியை போலீஸ் உதவியுடன் கொன்றுள்ளார் ஆஸ்திரேலிய நபர் ஒருவர்.
புத்தாண்டு தினத்தன்று மேற்கு ஆஸ்திரேலிய போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், பெர்த் புறநகர் பகுதியில் குறிப்பிட்ட முகவரியைத் தெரிவித்து அந்த சாலை வழியே வந்து கொண்டிருந்த போது, 'நீ ஏன் சாகக்கூடாது?’ என கொலைவெறியுடன் ஒருவர் கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டதாக புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து கொலை அல்லது தாக்குதல் போன்ற அசம்பாவிதத்தை எதிர்பார்த்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால், அங்கு சென்று சேர்ந்ததும் தான் தெரிந்தது, பாத்ரூமில் கத்திய நபர், சிலந்தி ஒன்றைக் கொல்லத் தான் அப்படி கத்தியுள்ளார் என்பது.
இந்த சம்பவத்தில் சிலந்தியைத் தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தங்களது டிவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிலந்தி, எந்த வகையைச் சேர்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் உள்ளன. அவற்றில், ரெட்பேக், ஃப்யூனெல் வெப் உட்பட பெரும்பாலான வகைகள் கடும் நச்சுத்தன்மை கொண்டவை.
இருந்தபோதிலும் 1981ஆம் ஆண்டில் இருந்து சிலந்திக் கடியால் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவைட் முதலுதவி அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.