இடி, மழையை தவிர்க்க மெதுவாக பறந்த ஏர் ஏசியா விமானம்: நிபுணர்கள்
ஜகர்தா: ஏர் ஏசியா விமானம் மாயமான இடத்தில் இருந்து 1,120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல்பகுதியில் சில பொருட்கள் கிடப்பதை ஆஸ்திரேலிய ராணுவ விமானம் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் அந்த பொருட்கள் மாயமான விமான பாகங்கள் இல்லை என்று இந்தோனேசிய துணை அதிபர் ஜுசப் கல்லா தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட்8501 மாயமானது. ஆனால் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மோசமான வானிலை காரணமாகத் தான் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் ஆசிரியரும், விமான போக்குவரத்து நிபுணருமான ஜெஃப்ரீ தாமஸ் கூறுகையில்,
ஏர் ஏசியா விமான கேப்டன் மோசமான வானிலையை தவிர்க்க மிகவும் மெதுவாக விமானத்தை ஓட்டியுள்ளார். இடி, மின்னலுடன் கூடிய மழையை தவிர்க்க கேப்டன் விமானத்தை மிகவும் மெதுவாக ஓட்டியுள்ளார். அவர் 36 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கையில் மிகவும் மெதுவாக ஓட்டியுள்ளார். விமானம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் தான் பறந்துள்ளது.
அந்த உயரத்தில் இவ்வளவு மெதுவாக செல்வதும் மிகவும் ஆபத்தானது. என்னவோ தவறாக நடந்துள்ளது என்றார்.
இந்நிலையில் விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் சில பொருட்கள் கிடப்பதாகவும், ஆனால் அது விமானத்தின் பாகங்களா என்று தெரியவில்லை என்றும் ஜகர்தா விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானம் ராடாரில் இருந்து மாயமான இடத்தில் இருந்து 1,120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாங்கா தீவு அருகே அந்த பொருட்களை ஆஸ்திரேலிய விமானப்படை விமானமான ஓரியான் கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்தோனேசிய துணை அதிபர் ஜுசப் கல்லா கூறுகையில்,
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றார்.