சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்… எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட ஆஸி. பிரதமர்
கேன்பரா:சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் வர நினைப்பவர்கள் நாடு கடத்தப் படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆளும் மாரிசன் அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
இந் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்ட விரோத படகு பயணத்தை மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து பயணத்தை தொடங்கிய நாட்டுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ நாடு கடத்துவார்கள்.
ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது என்று பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். ஆள் கடத்தல்காரர்களை குறிவைத்து 15 நாடுகளின் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதிக அகதிகள் வெளியேறும் நாடுகளாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இடைப்பட்ட நாடுகளாக உள்ள இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இந்த வீடியோ பரப்பப்படுகின்றது. நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் இது போன்ற வீடியோவை ஆஸ்திரேலிய பிரதமர் வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.