வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி- 15 பேர் படுகாயம்
வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆஸ்திரியாவில் கொரோனா பரவல் கடுமையாகி உள்ளது. இதனால் அந்த நாட்டில் நேற்று முதல் மீண்டும் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தலைநகர் வியன்னாவில் தேவாலயம் ஒன்றின் அருகே உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேவாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்களா? என்பது உறுதி செய்யபடவில்லை.
இந்த தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.