ஹார்ட் அட்டாக் இல்லை... திடீர் மயக்கம்... ஸ்ரீதேவி உடற்கூறு ஆய்வில் திடுக் தகவல்!
ஓட்டல் அறையில் இருந்த ஸ்ரீதேவி பாத்டப்பில் இருந்த போது மயக்கம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
துபாய் : துபாய் ஓட்டலில் இருந்த போது ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உடனடியாக உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மயக்கம் ஏற்பட்டதால் தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்து ஸ்ரீதேவி உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தடயவியல் அறிக்கையின் விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் துபாய் தடயவியல் துறையினரால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை மரணம் தானா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆட்டோப்ஸி அறிக்கை இந்திய தூதரக அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கார்டியக் அரெஸ்ட் என்பதற்கு பதிலாக ஆக்சிடெண்டல் மயக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மயக்கம்
அதாவது இதய செயல்பாடு திடீரென நின்றதன் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டு குளியல் தொட்டிக்குள் மயங்கி விழுந்திருக்கலாம் என்கிறது தடயவியல் அறிக்கை. மயக்கத்தைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த வேகத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்போதே இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
உடனடியாக உயிர்பிரிந்துள்ளது
ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றது 9 அல்லது 10 மணியாக இருந்திருக்கலாம் என்றும் 10.15 மணியளவில் ஸ்ரீதேவி ஓட்டல் குளியல் அறையில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாத் டப்பில் விழுந்த வேகத்தில் உடனடியாக ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்திருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
நிதானம் தப்பும் அளவுக்கு மது அருந்தினாரா?
இதனிடையே ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்ற போது அவர் அதிக அளவில் மது அருந்தி இருந்ததாக ரத்த மாதிரிகள் கூறுகின்றன. நிதானம் இல்லாத அளவிற்கு குடிபோதையில் இருந்ததாலேயே நிலைமைய ஸ்ரீதேவியால் உடனடியாக சுதாரிக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது.
துபாய் போலீஸ் அறிக்கை
மேலும் துபாய் போலீசார் ஸ்ரீதேவி மரணம் குறித்து அளித்துள்ள அறிக்கையில் இயற்கையான மரணம் தான் என்று தெரிவித்துள்ளது. குற்ற நோக்கில் மரணம் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.